அடுத்த நாள் வெள்ளி கிழமை, காலைல இருந்து வேலையே ஓடல. அவளுக்கு எப்டி என் நம்பர் கிடைச்சிருக்கும்?. அந்த மெசேஜ் வந்த அப்பறம் 10 தடவைக்கு மேல அந்த நம்பர்க்கு கால் பண்ணிருப்பேன். எல்லா தடவையும் ஒரே அக்கா தான் பேசினாங்க. "உங்கள் கால் அட்டென்ட் பண்ணவில்லை, மீண்டும் முயற்சிக்கவும்"
அதே கம்ப்யூட்டர் வாய்ஸ். கடுப்பாகி அது கூட சண்ட போட்டுட்டு இருந்தேன்.
"அக்கா அக்கா, ப்ளீஸ்கா, வீணாவ, பேச சொல்லுகா"
வித்யா காலிங்னு வந்தது.
"அண்ணா, வேலை கெடைச்சது சொல்லவே இல்ல பாத்தியா"
"இல்லமா கொஞ்சம் பிஸி அதான்"
"சரி சரி, நேத்து அண்ணி உன் நம்பர் வாங்கினாங்க. அத சொல்ல தான் கூப்டேன். நேத்தே சொல்லணும்ன்னு நெனச்சேன். மறந்திட்டேன்"
"என்ன உன் கிட்ட வாங்கினாளா?"
"ஆமா அண்ணா, பார்கிங்ல என் வண்டி பக்கத்துல நின்னுட்டு இருந்தாங்க. அதான் எனக்கும் புரில என் வண்டிய எப்டி கண்டு புடிச்சாங்கனு"
"நீ தான் புது வண்டி வாங்கிட்டேன்னு ஆர்குட், facebook ல, வளைச்சு வளைச்சு போட்டோ போட்டு இருந்தியே, அத பாத்திருப்பா"
"ஹி ஹி, சரி சரி கிண்டல் பண்ணாத, போன் பண்ணாங்களா?"
அவ கிட்ட என்ன சொல்ல? இல்லன்னு சொல்லி வெச்சிட்டேன். எப்படா சாயங்காலம் வரும்ன்னு காத்திருந்தேன். காதலிச்சா வெயிட் பண்ணி வெயிட் பண்ணியே பாதி வயசு போய்டும் போல.
என்ன பண்ணேனா? அட என்னங்க இது கூட சொல்லணுமா. மெட்ராஸ்க்கு பஸ் ஏறினேன். எப்பவும் பெங்களூர்ல இருந்து ஒரு 9 இல்ல 10 மணிக்கு பஸ் ஏறினா, விடியும் போது சென்னை வந்திடலாம். அன்னிக்கு அத எல்லாம் கவனிக்கவே இல்ல. 7 மணிக்கே ஏறிட்டேன்.
வழி எல்லாம் கால் பண்ணி பாத்தேன். எடுக்கவே இல்ல ராட்சசி. கடைசியா ஒரு மெசேஜ் அனுப்பினேன். 4 மணிக்கு அசோக் பில்லர் வருவேன்னு. அவள பாத்துட்டே கோயம்புத்தூர்ல இருந்து மெட்ராஸ் வந்தேன். ஆனா அவள பாக்க வரதுக்கு வரும் போது மட்டும் ஏன் டைம் ஓடவே மாட்டேங்குது?.
காலைல பஸ்ஸ விட்டு எறங்கி யோசிச்சேன். அசோக் நகர் பஸ் ஸ்டாப் போய் வெயிட் பண்ணலாமா? சுத்தி பாத்தேன் ஒரு ஆட்டோ இல்ல. பில்லர் மட்டும் அதே கம்பீரத்தோட நின்னுட்டு இருந்தது. சிங்கம் என்ன பாத்து சிரிக்கற மாறி இருந்தது. பஸ் ஸ்டான்ட் குள்ள இருந்து ஒரு உருவம் என்ன பாத்து ஓடி வந்தது.
அது யாருன்னு பாக்கறக்குள்ள என்ன வந்து கட்டி பிடிச்சது. வீணா தான். அந்த விடிய காலைல, ஊரே தூங்கிட்டு இருக்க டைம்ல எனக்காக வந்திருக்கா. அவ நால என்ன நிமிர்ந்து பாக்க முடில. அவ கண்ல இருந்து தண்ணி கொட்டிட்டு இருந்துது. மெல்ல நிமிர்ந்து என் நெத்தில ஒரு முத்தம் வெச்சா. மார்கழி மாசம் பனில, ஐஸ் கட்டி எடுத்து நெத்தில வெச்சா எப்டி இருக்கும். அப்டி இருந்தது அந்த முதல் முத்தம், அந்த முத்தத்துல காமம் இல்ல. அவ என்ன பிரிஞ்ச வேதனை தெரிஞ்சது. அவள கூட்டிட்டு போய் ஹாஸ்டல்ல விட்டுட்டு ரூம்க்கு வந்தேன்.
என் கூட நடந்து வரும் போது என் கைய பிடிச்சுபாளான்னு ஏங்கின காலம் எல்லாம் போய், அதே கை என் கைக்குள்ள அடக்கமா இருந்தது. ஒரு வார்த்தை பேசல ஹாஸ்டல் போற வரைக்கும். 10 மணிக்கு பாக்க வரேன்ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.
என் வாழ்கையா இது? நெனச்சு பாக்காத விஷயம் எல்லாம் நடக்குதே.
அவ்ளோ நாள், அவ கூட வண்டில போனதில்ல. என பின்னாடியும் அவ உக்காந்தது இல்ல. வண்டிய உருட்டிட்டே தான் பேசிட்டு போவோம். அந்த ரெண்டு நாள், எல்லாமே தல கீழா மாறிடுச்சு. நான் நிறுத்துன்னு சொன்னா கூட நிறுத்தாத உதடுகள் அந்த ரெண்டு நாள் பேசவே இல்ல. எப்பவும் குறு குறு பார்வை பாத்த அதே கண்கள், தரைய தவிர எங்கயும் பாக்கல. சனிக்கிழமை சாயங்காலம் பீச்ல நடந்த நடை, அவ கைய பிடிச்சிட்டு. எங்க கால் மண்ல பொதஞ்சது. அவ தலை என் நெஞ்சுல பொதஞ்சது.
"வீணா, ஏன் அழுதுட்டே இருக்க?"
"தெரிலடா... மொதல் முறையா அழுதா சந்தோசமா இருக்கு"
மகாபலிபுரம் வரைக்கும் போனோம் வண்டில. பின்ன உக்காந்துட்டு என் மேல சாஞ்சிட்டு, கட்டி புடிச்சிருந்தா. அவ கைய பாத்துட்டே, அந்த ஸ்பரிசத அனுபவிசிட்டே காஷ்மீர் கூட போய்டலாம். பெருசா பேசல, சின்ன சின்ன உரையாடல் தான். நெறைய பேசுவான்னு நெனச்சிருந்தேன். கொஞ்சம் ஏமாற்றம் தான்.
என்ன வழி அனுப்ப பஸ் ஸ்டான்ட் வந்தா. பஸ் மெதுவா பஸ் ஸ்டான்ட் விட்டு வெளிய வந்துட்டு இருந்தது. திரும்பி அவள பாத்தேன். அது வரைக்கும் ஐ லவ் யூ சொல்லாத அவ வாய், கை அசச்சிட்டே ஐ லவ் யூ ன்னு முணுமுணுத்தது.
அதுக்கப்பறம் ஒவ்வொரு வாரமும் மெட்ராஸ்ல தான். கொஞ்சம் கொஞ்சமா பழைய படி பேச ஆரம்பிச்சா.
எப்பவுமே காதலிச்சிட்டே இருக்க முடியுமா? அது மட்டுமே வாழ்க்கை இல்லையே!. அடுத்த கட்டத்துக்கு போச்சு எங்க உறவு. ஒரு பெரிய குழப்பத்தோட.